Sunday 5 January 2014

குளிர் காலத்தில் வீட்டில் வளர்க்கும் பறவைகளை பாதுகாக்க சில டிப்ஸ்...



குளிர் காலம் என்பது உங்களுக்கும் உங்களை சார்ந்த செல்லப் பிராணிகளுக்கும் சிறிது கடினமான காலம் தான். செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் எவரும் இந்த காலத்தில் பிராணிகளை பராமரிப்பது குறித்து பல பேரிடம் பேசி மற்றும் பல விஷயங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். முக்கியமாக நீங்கள் வைத்திருக்கும் பறவைகளுக்கு இந்த பனி காலத்தில் கொஞ்சம் கூடுதலான அக்கறை தேவைப்படுகின்றது.
 


 உங்களை நாடி வரும் பறவையாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டு கூண்டுகளில் வைத்திருக்கும் பறவையாக இருந்தாலும் சரி இரண்டிற்கும் பராமரிப்பு அவசியம் தேவைப்படுகின்றது. கூட்டுக்குள் இருக்கும் பறவைகளை நாம் வீட்டிற்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் தோட்டங்களில் வாழும் பறவைகளின் சூழல் சற்றே மாறுபட்டது. இவ்வாறு தோட்டத்தில் வாழும் பறவைகளை பாதுகாப்பது எப்படி? காலத்தின் மாற்றத்தை சமாளிக்க அவைகள் பெரும் அவதிப்படுகின்றன. நாம் அவற்றை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.

இத்தகைய தோட்டத்துப் பறவைகளை கூட்டிலிருக்கும் பறவைகளோடு ஒப்பிடும் போது நாம் அதிக கவனத்துடன் மற்றும் கூடுதல் அக்கறையுடனும் குளிரிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். அவற்றிற்கு தேவையான உணவு, உறைவிடம், குளிர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் மற்றும் அதற்கு ஏதேனும் குஞ்சுகள் இருந்தால் அவற்றையும் பார்த்துக் கொள்வது போன்றவற்றை நாம் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

 குளிர் காலத்தில் கூடுதல் அக்கறையுடன் செல்லமாக வளர்க்கும் பறவைகளை பாதுகாப்பதும் சிறிது கடினமான விஷயம் தான். நாம் இதற்காக ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொண்டால் இதையும் எளிதாக செய்து விட முடியும். பின்வரும் பகுதியில் இத்தகைய பறவைகளை குளிர்காலத்தில் பாதுகாப்பது எப்படி என்று சொல்லப்பட்டுள்ளது. இதை நாம் கூட்டிலுள்ள பறவைகளுக்கும் தோட்டத்துப் பறவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இந்த குறிப்புகளை நாம் பின்பற்றுவதன் மூலம் நமது பறவைகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வகையில் பாதுகாக்க முடியும்.

வீட்டிற்குள் இருக்கச் செய்யுங்கள்: பனி மற்றும் குளிர்ந்த காற்று வீசும் இந்த காலத்தில் எந்த ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பவரும் அதை வெளியே இருக்க விட மாட்டார்கள். உங்கள் வீட்டு பிராணிகளும் இதையே எதிர்பார்க்கும். பறவைகளை வீட்டிற்குள் வைப்பது தான் அவைகளுக்கு இதமூட்டும். ஒரு வேளை தோட்டத்தில் இருக்கும் பறவைகளாக இருந்தாலும் அவற்றையும் தற்காலிகமாக உள்ளே வைப்பது சிறந்ததாகும்.

அறை வெப்பநிலையை நிலைப்படுத்துங்கள்:
வீட்டிலிருக்கும் பறவைகளை அறைக்குள் இருக்கும் வெப்பநிலைக்கு எப்போதும் வைத்திருப்பது அவசியமானதாகும். இதற்காக ஹீட்டரை பயன்படுத்தலாம். பறவைகள் இருக்கும் இடத்தில் ஈரப்பதத்தை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். வறண்ட காற்று பறவைகள் மேல் அதிகம் பட்டால் அவைகளின் சீத மென்படலம் பாதிக்கப்படுகின்றது.

 ஈரப்பதத்தை மேம்படுத்துங்கள்: குளிர்காலத்தில் அறையை சூடுபடுத்தும் ஹீட்டர்கள் அறையின் காற்றை வறண்ட நிலைக்கு கொண்டு செல்கின்றன. வீட்டில் இருக்கும் பறவைகளை கொஞ்சம் நீராவியை நுகரச் செய்ய வேண்டியதும் அவசியமாகும். நீங்கள் ஒரு சூடான குளியலை அனுபவிக்கும் போது இந்த குருவிக்கூட்டையும் குளியல் அறையின் ஓரத்தில் வைத்தால் அதற்கும் இதமாக இருக்கும்.

குடிநீரை அவ்வப்போது மாற்றுவது: குளிர் காலத்தில் நாம் பறவைகளுக்கு கொடுக்கும் தண்ணீர் குளிர்ந்து போகிறது. அவைகளுக்கும் குளிர்ந்த நீரை அருந்துவது கடினமாக இருக்கும். ஆகையால் அவ்வப்போது பறவைகள் குடிப்பதற்காக வைக்கும் நீரை மாற்றுவது அவசியமானதாகும். மாற்றும் போது கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை கொடுக்கவும்.

உணவு: தோட்டத்து பறவைகளை குளிர் காலத்தில் பராமரிக்கும் போது நாம் அதற்கு போதுமான அளவு உணவு கொடுக்க வேண்டும். குளிர் காலத்தில் தோட்டத்து பறவைகளுக்கு இயற்கை உணவு கிடைப்பது கடினமாக இருக்கும். ஆகையால் அவைகளுக்கு தேவையான சக்தி கொடுக்கும் வண்ணம் நாம் படைக்கும் உணவு இருத்தல் வேண்டும்.

 சூடான குளியல்: பொதுவாக பறவைகளுக்கு தண்ணீரில் விளையாடுவது பிடித்த விஷயமாக அமைகின்றது. ஒரு வேளை உங்கள் பறவைக்கும் இது பிடித்தமான செயலாக இருந்தால் அதற்கு ஒரு சிறிய சூடான குளியலை கொடுப்பது சிறந்த திட்டமாகும். ஆனால் குளித்தவுடன் உடனடியாக அதை உலர வைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். குளிப்பதால் அந்த பறவை அதற்கு தேவையான ஈரப்பதத்தை பெறுகிறது.

 அறையை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கவும்: வீட்டுப் பறவைகளை நாம் கூட்டிற்குள் வைக்காவிடில் அவற்றை நாம் சற்றே கூடுதல் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எரிவாயு, மின் சாதன பொருட்கள் ஆகியவை பறவைக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டியது இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக அமைகின்றது.

0 comments:

Post a Comment